பிசியோதெரபிஸ்ட்கள் தங்களை மருத்துவர்கள் என்று கூறினால், அது குறித்து யாரேனும் புகார் அளித்தால், அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிசியோதெரபிஸ்ட் படித்தவர்கள் தங்களை மருத்துவர்கள் என்று கூறி சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பிசியோதெரபிஸ்ட்கள் தங்களை மருத்துவர்கள் எனக் குறிப்பிட தடை விதித்து 2008ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மருத்துவர்கள் என கூறிக் கொள்ளும் பிசியோதெரபிஸ்ட்கள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம், மருத்துவர்கள் என கூறும் பிசியோதெரபிஸ்ட்கள் மீது புகார் அளித்தால் உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.