திமுக முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சேலத்தை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி. குமாரசாமிபட்டியில் அமைந்துள்ள இவரது வீட்டில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். இதில், அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், மொபட் ஆகியவர் எரிந்து சேதமாகின.
இதைக்கண்டு வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து செவ்வாய்பேட்டை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பின், நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள செவ்வாய்பேட்டை காவல் துறையினர், செல்வ கணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
முன்னதாக, செல்வ கணபதி சேலம் மாநகர திமுகவில் உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் காரணமாக செல்வ கணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.