தமிழகத்தில் எத்தனையோ நடிகர்கள் கட்சி தொடங்கியிருந்தாலும், அவர்களின் அத்தனை பேரின் எண்ணங்களும் பொய்த்துபோனது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், சிலர் ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் அரசிலுக்கு வருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர்களை பார்ப்பதற்கு மக்கள் வருவார்கள் என்பது உண்மைதான். ஆனால், அரசியலுக்குள் நடிகர்கள் வருவதை மக்கள் விரும்பவில்லை.
எம்ஜிஆர் கட்சித் தொடங்கியதைப் பார்த்து தமிழகத்தில் முன்னதாக எத்தனையோ நடிகர்கள் கட்சி தொடங்கினார்கள். ஆனால், அவர்களின் எண்ணங்கள் நிறைவேறவில்லை. ரஜினிகாந்த்துக்கு என ஒரு கூட்டம் உள்ளது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனாலும், ஆட்சி என வரும் போது அதன் நிலை மாறும். கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலை என்ன என்பது ரஜினிகாந்த்துக்கு தெரியும்.
தமிழகத்தில் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக-வை தான் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எம்ஜிஆர் மறைவவையடுத்து கட்சியின் தலைமையை ஏற்ற ஜெயலலிதா, அதிமுக-வை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நீர்நிலைகளைத் தூரவார முயற்சிப்பது குறித்து செல்லூர் ராஜூ கூறும்போது, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ.900 கோடி ஒதுக்கியுள்ளது. முக ஸ்டாலின் நீர்நிலைகளை துர்வார முயற்சி செய்வது மக்களை ஏமாற்றும் செயல் என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.