அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் எம்.எல்.ஏ-க்களும் அரசியல் பிரமுகர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்பட 9 எம்.எல்.ஏ-க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி, உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன், உயர்க்கல்வித்துறை அமைச்சரும் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.பி.அன்பழகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல, திமுகவில், கொரோனா தொற்றால் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்தார். மேலும், திமுகவில் செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் எம்.எல்.ஏ ஆர்.டி. அரசு ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.