ஓகி புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், தொலைப்பேசியில் கேட்டறிந்தா, பிரதமர் மோடி.
தென் தமிழகத்தை தாக்கிய ஓகி புயல், நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழையை கொட்டித் தீர்த்தது. இதனால் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. குமரி மாவட்டத்தில் அணைகள் முழுமையாக நிரம்பிவிட்டன. உவரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
கடலில் மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் என்ன ஆனார்கள் என்ற விபரம் தெரியாததால், அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். மூன்று மாவட்டங்களிலும் உயர் மின் அழுத்த கோபுரங்கள், மின் கம்பங்கள் ஆயிரக்கணக்கில் சேதம் அடைந்துள்ளன. எனவே பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஓகி புயலாம் தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். புயல், மழை வெள்ள சேத விபரங்களைக் கேட்டறிந்தார். தமிழகத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் எனவும் உறுதியளித்ததாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.