Advertisment

ஓ.பன்னீர்செல்வம் அணி 12 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் திமுக புதிய செக் : உச்சநீதிமன்றத்தில் கேவியட் தாக்கல்

ஓ.பன்னீர்செல்வம் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது திமுக! ஓபிஎஸ் அணிக்கு இது புதிய செக்!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
o.panneerselvam, tamilnadu government, supreme court of india, chennai high court, deputy cm o.panneerselvam, cm edappadi palaniswami, dmk caviat petition

ஓ.பன்னீர்செல்வம் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது திமுக! ஓபிஎஸ் அணிக்கு இது புதிய செக்!

Advertisment

ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது அணியாக தனியாக இயங்கிய 12 எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டச் சிக்கல் எழுந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 18-ம் தேதி எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் போது, அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததுதான் அந்தப் பிரச்னை! அது தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், செம்மலை, க.பாண்டியராஜன் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ. க்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா அர.சக்கரபாணி வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே. பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர். நடராஜ் ஆகியோர் அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்து உள்ளனர். அருண்குமார் எம்.எல்.ஏ. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். இதற்காக அவர் சார்ந்த கட்சியிடமும் அவர் அனுமதி பெறவில்லை.

அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ. க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன் ஆகியோர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். ஆனால், அதன் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட 12 எம்.எல்.ஏ. க்கள் மீது தமிழக சட்டமன்ற விதிகள் 1986 ல் கூறப்பட்டுள்ள தகுதி நீக்கம் தொடர்பான பிரிவுப்படி, நடவடிக்கை எடுக்கும்படி, சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் ' என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தங்களின் தரப்பு பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என கோரினார். மேலும் பதில் அளிக்க குறைந்தது மூன்று வாரங்கள் தேவை எனவே விசாரணை நவம்பர் மாதம் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என கூறினார்.

இதற்கு திமுக சார்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் உத்தரவிட்ட நீதிபதி இந்த மனு குறித்து பதில் அளிக்கும்படி சபாநாயகர், சட்டசபைச் செயலாளர் ஆகியோருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் தங்கள் பதில் மனுவை அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை அன்றைய தேதிக்கு (27.10.2017) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்தச் சூழலில் இந்திய உச்சநீதிமன்றத்தில் நேற்று (13-ம் தேதி) ஒரு மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் அணியின் எம்.எல்.ஏ.வான செம்மலை, ‘திமுக தொடர்ந்த வழக்கு சபாநாயகரின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்புகிறது. எனவே இந்த வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற முயற்சிப்பதாக திமுக தரப்பில் கருதுகிறார்கள். எனவே அவசரமாக இன்று (14-ம் தேதி) உச்சநீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘செம்மலை தாக்கல் செய்த வழக்கில் எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது’ என திமுக கூறியிருக்கிறது.

இந்த கேவியட் மனு தொடர்பாக திமுக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் நாம் பேசியபோது, ‘திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு சபாநாயகரின் அதிகாரம் தொடர்பானது அல்ல. சபாநாயகர் தனது அதிகாரத்தை பாரபட்சமாக பயன்படுத்தியது மற்றும் விதிகள் அடிப்படையில் முறையாக பயன்படுத்தாதது தொடர்பானது. எனவே இதில் அரசியல் சாசன பெஞ்சுக்கு எந்த அவசியமும் இல்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை விரைவாக விசாரித்தால், ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் பதவியும் சட்டப்படி பறிபோய்விடும். அதற்கு பயந்தே, வழக்கை இழுத்தடிக்கும் நோக்குடன் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற ஓபிஎஸ் அணி தரப்பில் கோரிக்கை வைக்கிறார்கள். அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி, வலுவான வாதங்களை வைப்பார்கள்.’ என்றார்கள் அவர்கள்.

உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை எப்படி கையாளும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

 

Chennai High Court Supreme Court Of India M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment