'எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம். போருக்கு தயாராக இருங்கள்' என தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்ட நிகழ்வின் போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதன்பின், காலா பட ஷூட்டிங், 2.0 படத்தின் புரோமோ என ரஜினிகாந்த் மிகவும் பிஸியாக வலம் வந்தார். சமீபத்தில் துபாயில் 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொண்டார். இந்நிலையில், அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ஆம் தேதி ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வருகிறது. அப்போது அவரது அரசியல் வருகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டது.
இச்சூழ்நிலையில், ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவரது வழக்கமான ஸ்டைலில் சுருக்கமான இன்று பேட்டி அளித்தார். அப்போது, "காலா படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. வரும் பிறந்தநாளுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க முடிவு செய்திருக்கிறேன். களத்தில் (அரசியல்) இறங்க வேண்டியதற்கு அவசரம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
கந்துவட்டியின் கொடுமை காரணமாக நேற்று தற்கொலை செய்து கொண்ட இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் குறித்து ரஜினிகாந்த் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.