தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு ஏழு ஆண்டுகளாகவும் ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கையை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். வரைவு அறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும். இதுகுறித்து 15 நாளில் பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்ட வரைவு www.tnscert.org என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 2018 ம் ஆண்டு முதல் இம்முறை அமல்படுத்தப்பட உள்ளது.