நீட் தேர்வுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வேளச்சேரியை சேத்ந்த காளிமுத்து மைலவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் தேர்வு இந்த் ஆண்டு மே 6 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான அறிவிப்பில் தங்கள் மாநிலத்தில் ஏதேனும் மூன்று தேர்வு மையங்களை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டிருந்தது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணபித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு என்பது கணினி மூலம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களை மாற்ற முடியாது என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்திருந்தது. இதனால் நீட் தேர்வு எழுதும் 17 வயதே நிறைந்த மாணவர்கள் அண்டை மாநில தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத செல்வதில் சிரமம் உருவாகும். எனவே தேர்வு மையங்களை தமிழகத்திற்குள் மறு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், தெண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதன்பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், 'தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கிய சி.பி.எஸ்.இ உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்களை தமிழகத்திலேயே ஒதுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்களை தமிழகத்தில் ஒதுக்கும் உத்தரவை சி.பி.எஸ்.இ இணையதளத்தில் வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.