ராஜிவ் கொலை வழக்கில் ஏழு பேரை விடுவிக்க அரசு எடுத்த முடிவை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளினியை முன் கூட்டி விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க இயலவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நளினி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதி சசிதரன் தலைமையிலான அமர்வு, ஏப்ரல் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், 20 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்தவர்களை முன் கூட்டி விடுதலை செய்து, 1994 ஆம்் ஆண்டு தமிழக அரசு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய கோரி 2015 ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நளினி கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, 2016ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சசிதரன், ஆர். சுப்ரமணியம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் சாசனம் 161-ன் படி சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது... உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க எந்த தடையும் இல்லை... இந்த அரசாணையின் அடிப்படையில் 2200 ஆயுள் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அரசியல் சாசனம் 161-ன் படி கைதிகளை முன்கூட்டி விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்தும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை முன்கூட்டி விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசால் எந்த முடிவும் எடுக்க இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.