நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் 8 பேர் பலியானதைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பஸ்கள் ஓடவில்லை.
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை இன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களான 7 டிரைவர்கள், கண்டக்டர் என 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை மட்டுமல்லாமல், தமிழகத்தை உலுக்கிய இந்த விபத்தைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக விபத்து நடந்த பொறையாறு பணிமனை முன்பு திரளானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அங்கிருந்து எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை.
நாகப்பட்டினம் மாவட்டத்தின் இதர பல பகுதிகளிலும் இதே நிலைதான். மயிலாடுதுறை பணிமனை மற்றும் சீர்காழி பேருந்து நிலையத்திலும் பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு அவர்களின் குடும்பத்தினர் பொறையார் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். எனினும் பல இடங்களில் போராட்டம் தொடர்கிறது.