கோவையில் சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பின்னர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் பல இடங்களில் அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மாநில சுயாட்சி உரிமையில் மத்திய அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
ஆனால் தமிழக அமைச்சர்கள் ஆளுநரின் ஆய்வு தவறில்லை என்றனர். ஆளுநர் ஆய்வு வரவேற்கதக்கது என்றும் ஆளுநர் ஆய்வு செய்தால் தான் மாநிலத்துக்கு என்ன தேவை என மத்திய அரசுக்கு தெரியும் என்றும் தெரிவித்தனர்.
முதலமைச்சர் கூட, 'ஆளுநர் ஆய்வு செய்தார் என்பதே தவறு என்றார். அரசின் திட்டங்களை அதிகாரிகளிடம் ஆளுநர் கேட்டறிந்தார்' என்று கூறினார்.
இந்த நிலையில், ராஜ்பவனில் இருந்து ஆளுநர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. எனது நேரடி ஆய்வை பலர் பாராட்டியுள்ளனர், இதில் அரசியல் உள்நோக்கம் என்று எதுவும் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே நான் செயல்பட்டிருக்கிறேன். வளர்ச்சிப் பணியில் மாநில அரசுக்கு ஒத்துழைக்கவே நான் ஆய்வு மேற்கொண்டேன். அதேசமயம், கட்டாயப்படுத்தியோ, வற்புறுத்தியோ எந்த கூட்டத்திற்கும் நான் அதிகாரிகளை அழைக்கவில்லை.
சட்ட நடைமுறைகளுக்கு மாறாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சிறப்பான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அறிவுரை வழங்கவே அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினேன். அசாமில் ஆளுநராக இருந்தபோதும் இதேபோல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். எனது ஆய்வுகளை அங்குள்ள மக்களே பாராட்டியிருக்கிறார்கள். இனியும் தமிழகத்தில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வுகளை தமிழக அரசும் அமைச்சர்களும் பாராட்டியுள்ளனர். ஆளுநர் இதுபோன்று ஆலோசனை நடத்துவதற்கு எந்த சட்டமும் தடையாக இல்லை. இதுபோன்ற செயல்கள் மூலம் வருங்காலத்தில் தமிழ்நாடு மிளிரும்" என்று ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.