கோவில் கும்பாபிஷேகத்தில், இஸ்லாமியர்கள் தலைவாழை இலையில் சைவ விருந்து பரிமாரிய நிகழ்வு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
புதுக்கோட்டை அருகே உள்ள அன்னவாசல் பகுதியில் பழமையான சவுந்திரநாயகி, அம்பிகா சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலிற்கு கும்பாபிஷேகம் செய்ய ஊர் பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று (5.2.19) கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் மதநல்லிணக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அன்னவாசல் ஊரைச் சுற்றி அதிகளவில், இஸ்லாமிய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரும் ஒன்றுக் கூடி, கும்பாபிஷேகத்திற்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் தலைவாழ் இலையில் சைவ உணவை பரிமாறியுள்ளனர், இஸ்லாமியர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த அன்னதானத்தில், கும்பாபிஷேகத்திற்கு வந்த அனைத்து பக்தர்களும் வயிறார உணவு உண்டனர். அவர்கள் அமர ஏதுவாக பந்தல்கள், சேர்கள் ஆகியவையும் போடப்பட்டிருந்தனர்.
இதனைக் கண்ட கும்பாபிஷேற்கு வந்த அனைவரும், அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்களை வெகுவாக வாழ்த்தி சென்றனர். இந்த அன்னதான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த முகமது ஃபாரூக் பேசுகையில், மத நல்லிணக்கம் என்பது, நம் தமிழகத்தின் தனித்துவமான அடையாளம். அதை வலியுறுத்தும் விதமாகவே, இந்த அன்னதான நிகழ்ச்சியை நடத்தியதாக கூறினார். மேலும் இந்த சைவ விருந்தில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாப்பிட்டது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்.