பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மூன்று நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டத்தைத் திரும்பப்பெறுவதாக செவிலியர்கள் அறிவித்தனர். இன்று முதல் அவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால், ஒரு பிரிவினர், ‘எங்களின் கோரிக்கைகள் குறித்து அரசாணை வெளியிடப்படும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என்று கூறி, போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றனர்.
இந்தநிலையில், டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களைச் சந்தித்து தி.மு.க எம்.பி கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "போராடி வரும் செவிலியர்களை சந்திக்க தமிழக அமைச்சர்கள் மறுக்கின்றனர். ரூ.7,000 மாத சம்பளத்தை வைத்துக்கொண்டு செவிலியர்களால் என்ன செய்ய முடியும்? செவிலியர்களின் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். பிற மாநிலங்களில் செவிலியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. போராட்டம் நடத்தி வரும் செவிலியர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். போராட்டத்தில் பங்கேற்றுள்ள செவிலியர்கள், பல்வேறு வகையில் மிரட்டப்பட்டுவருகிறார்கள். வேலையிலிருந்து தூக்கிவிடுவோம் உள்ளிட்ட பல மிரட்டல்களை செவிலியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது ஆளும் அரசு. இந்த அரசாங்கத்திற்கு டெல்லியில் சொல்வது மட்டும் தான் காதில் விழுகிறது. மக்களின் எந்த குறைகளும் அவர்கள் காதில் விழவில்லை" என்றார்.