திமுக தலைவர் கருணாநிதியை இன்று கோபாலபுரம் வீட்டில், பிரதம் மோடி வந்து சந்தித்துப் பேசினார். அப்போது, டெல்லிக்கு வருமாறு கருணாநிதியை அழைத்தார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஒய்வு எடுத்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் முரசொலி அலுவலகம் சென்று வந்தார். அதன் பின்னர் தனது கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்நிலையில் தினத்தந்தி பவளவிழாவிற்கு பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும், திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று சந்தித்தார். 12.30 மணிக்கு கோபாலபுரம் வந்த பிரதமர் மோடியை, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை தலைவர் கனிமொழி எம்.பி. ஆகியோர் வரவேற்று முதல் மாடியில் உள்ள, கருணாநிதியின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
பிரதமர் மோடி வந்திருக்கிறார் என கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் சொன்னார். உடன் கருணாநிதி மோடியை பார்த்து புன்னகைத்தார். மோடி இரு கரங்கள் கூப்பி வணக்கம் சொன்னார். உடன் கருணாநிதியும் கையை உயர்த்தினார்.
அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மோடி, டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதியை சந்தித்தது பற்றி குறிப்பிட்டு பேசினார். அதைக் கேட்டதும் கருணாநிதி மீண்டும் சிரித்தார்.
உடன் மோடி, ‘நீங்கள் ஓய்வெடுக்கு டெல்லிக்கு வாங்க. என் வீட்டில் தங்கியிருந்து ஓய்வெடுங்கள்’ என்று கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டார். அதற்கும் கருணாநிதியிடம் இருந்து புன்னகையே பதிலாக கிடைத்தது.
பின்னர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்த மோடி, விமான நிலையம் சென்று, டெல்லி சென்றார்.
கோபாலபுரத்துக்கு மோடி செல்கிறார் என்ற தகவல் பரவியதும் திமுக தொண்டர்கள் அங்கு திரண்டு விட்டனர். மோடி சென்றதும், திமுக தொண்டர்கள், ‘தலைவரை பார்க்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். இந்த விஷயம் மு.க.ஸ்டாலினிடம் சொல்லப்பட்டது. அவர், கருணாநிதியை மாடியில் இருந்து வீட்டு வாசலுக்கு அழைத்து வந்தார்.
தொண்டர்களைப் பார்த்த கருணாநிதி, உற்சாகமாக கையைக் காட்டினார். உடன் தொண்டர்கள் அனைவரும், ‘கருணாநிதி வாழ்க’ என கோஷமிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.