நடிகர் கமல்ஹாசன் திரைப்படத்தில் வேண்டுமானால் பலகோடி ரூபாய் செலவு செய்து முதலமைச்சராகலாம் என அமைச்சர் ராஜேந்திர பலாஜி விமர்சனம் செய்துள்ளார். முன்னதாக, அரசின் அனைத்து துறைகளிலும், ஊழல் மலிந்து கிடக்கின்றன என நடிகர் கமல்ஹாசன் கூறியது, தமிழக ஆட்சியாளர்களை கடுப்பேற்றியது. இதனால் அமைச்சர்கள் முதல் முலதமைச்சர் வரை கமல்ஹசன் குறித்து விமர்சித்தனர். குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு, கமல்ஹாசனின் வருமான வரி குறித்து சோதனை செய்வோம் என்றும், வழக்குப் போட்டுவிடுவோம் என்று அமைச்சர்கள் சிலர் மிரட்டலும் விடுத்தனர். ஆனால், அதைக் கடுங்கோபத்துடன் கலந்த சிரிப்பு வருகிறது என கூறிய கமல், ஊழல் குறித்த புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்புமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இப்படி அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரித்து வரும் கமல்ஹாசன், ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், தற்போதைய ஆட்சி கட்டாய தேர்தல் போல இருப்பதாகவும், தமிழக மக்கள் அதில் இருந்து மீள வேண்டும். அதிகாரத்தினால் மட்டுமே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்றால் அந்த அதிகாரத்திற்கு வரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் முதலமைச்சராக வரவும் தயாராக இருக்கிறேன் என்றார்.
இந்த நிலையில், சென்னை மாதாவரத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பலாஜி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: கோடிக்கணக்கான பணம் செலுத்தி திரைப்படம் எடுத்து அதில் நடிகர் கமல்ஹாசன் முதலமைச்சராக வரட்டும். முதலில் அவரை கவுன்சிலராக வரச் சொல்லுங்கள் என்று விமர்சித்தார்.