Advertisment

”பாதுகாப்பில்லாத சட்டத்தை இயற்றி மாணவர்களுக்கு துரோகம் செய்தது தமிழக அரசு”: மு.க.ஸ்டாலின்

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin, DMK

மருத்துவப் படிப்பு சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த 85 சதவீத உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாதுகாப்பில்லாத சட்டம் இயற்றி மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் இழைத்துவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

Advertisment

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் 18.34 லட்சம் பேர் எழுதினர். அவர்களில், தமிழகத்தில் சுமார் 90 ஆயிரம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் சி.பி.எஸ்.இ பாடப்பிரிவில் இருந்தே கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டதாகவும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் எளிதாக இருந்ததாகவும், தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என மத்திய அரசு முழக்கமிட்ட நிலையில், வெவ்வேறு மொழிகளுக்கு வெவ்வேறு வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி வெளியானது. இதில், இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்களில் ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இடஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடும் வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த ஜூன் 22-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையால் தாங்கள் பாதிக்கப்படுவோம் எனக்கூறி சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை வெள்ளிக் கிழமை நடைபெற்றது. அப்போது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த 85% இட ஒதுக்கீடு அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பாதுகாப்பில்லாத சட்டத்தை இயற்றி மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது. இதனால், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.”, என தெரிவித்தார்.

Chennai High Court M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment