சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்து இன்று மாலை ஐந்து மணிக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
மாலை 4:30 ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை சந்திக்கவுள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் எம்.எல்.ஏக்களுடன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மாலை 4:35 தற்போது ஆளுநரை சந்திப்பதற்காக ஸ்டாலின் ராஜ்பவனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்.
மாலை 4:42 ஆளுநர் மாளிகைக்கு ஸ்டாலின் வந்தடைந்தார். அவருடன் 7 திமுக எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வந்துள்ளனர். சேகர் பாபு, மா.சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன், வேலு, பொன்முடி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி, ஐயுஎம்எல் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆகியோர் ஸ்டாலினுடன் வந்துள்ளனர்.
மாலை 4:50 ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி வலியுறுத்தினர். ஸ்டாலின் உட்பட 9 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநர் தற்போது பேசி வருகிறார்.
மாலை 5:05 ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் உட்பட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மொத்தம் மூன்று கடிதங்கள் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் தனியாக ஒரு கடிதமும், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒரு கடிதமும், காங்கிரஸ் சார்பில் ஒரு கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதங்களில், "சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்" என்பதையே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாலை 5:12 இன்னும் சற்று நேரத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 5:19 ஆளுநரை சந்தித்து பேசிய பின் ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், "அடுத்த ஒரு வாரத்திற்குள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை சட்டமன்றத்தை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில், சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடுவோம் என ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. 119 எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்பு உள்ளது. இந்த இரண்டு எண்ணில் எது பெரியது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.
மாலை 5:27 ராஜ்பவனில் இருந்து ஸ்டாலின் தனது காரில் கிளம்பிச் சென்றார்.
அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் ஒரு வாரத்திற்குள் உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு நேரடியாகவே ஸ்டாலின் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் கெடு விதித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கப் போகிறது என்பது அரசியல் நோக்கர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
பாஜகவின் நிழலிலேயே தற்போதைய பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், தமிழக பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவும் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் மிகவும் கடுமையாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், திமுகவின் நெருக்கடியால் ஆளுநர் வித்யாசாகர் ராவ், பழனிசாமி அரசை பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி உத்தரவிடுவாரா?, டெல்லியில் இருந்து அதற்கான சிக்னல் கிடைக்குமா? என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.