டாஸ்மாக் கடைகளில் தரமற்ற மதுபானங்களை விற்பனை செய்ய தடை கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ஸ்ரீராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் நண்பருடன் ஏன்சியன்ட் காஸ்க்' மற்றும் 'பெக்கார்டி' ரம்மை டாஸ்மாக் கடையில் வாங்கி அருந்தியதாகவும், ஆனால் தனக்கு தன் நண்பருக்கும் வயிற்று வலி, வாந்தி , பேதி ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மது வகைகளை வாங்கி தஞ்சையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது , அதில்
'டார்டாரிக் அமிலம்' அதிக அளவில் இருந்துள்ளது.
மேலும் அந்த ஆய்வறிக்கையை உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கைநும் எடுக்கவில்லை. மேலும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் மதுபானம் இருக்கிறதா என்பது குறித்து தெளிவாக இல்லை. எனவே மதுபானங்களை சோதனை செய்ய முடியாத நிலை உள்ளது என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது தவறானது என்றும், மது வகைகள் இந்த சட்டத்தின் கீழ் தான் உள்ளது. எனவே டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளை சோதனை செய்ய உத்தரவிட வேண்டும், அதேபோல டாஸ்மாக் கடைகளுக்கு தரமற்ற மது மற்றும் கலப்பட மது வகைகளை உற்பத்தி, வினியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மதுபான கடைகளில் விற்கப்படும் மது பானங்களை ஆய்வு செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய பரிசோதனையில் இந்த மதுபானங்களில் அமிலங்கள் அதிகளவில் கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தரம் குறைந்த மதுபானங்களை விற்பனை செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை பரிசோதிக்க முடியாது, அதனால் மதுபான ஆலையிலேயே மதுபானங்களை ஆய்வு செய்ய உத்தரவிடும் வகையில் மனுவை திருத்தி தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.