திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக கூறி, 742 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்பில் சேர தடை விதிக்கும், சட்டக் கல்வி விதிகள் 2008-ம் ஆண்டு அமலுக்கு வந்தன. இந்த சட்டவிதிகளின் அடிப்படையில், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருந்த 742 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை கொடுங்கையூரை சேர்ந்த திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜெய்பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது... பார் கவுன்சிலின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிறப்புக்குழுவுக்கு வழக்கறிஞர்களை இடை நீக்கம் செய்ய அதிகாரமில்லை என வாதிடப்பட்டது.
இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய சட்டத்துறை செயலாளர், தமிழக சட்டத்துறை செயலாளர், அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.