கர்நாடகா நதி நீர் பங்கீடு குறித்து, சுப்ரிம் கோர்ட் பிபரவரி 16ம் தேதி தனது இறுதி தீர்ப்பை சொன்னது. கர்நாடகாவிற்கு 284.75 டிஎம்சி நீர் மற்றும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவில் காவிரியை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாடக் கூடாது. இதற்காக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அடிப்படையில் ஒரு அமைப்பை 6 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டு என்றும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு செய்ய இயலாது என்றும் தீர்பு வழங்கியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. சுப்ரிம் கோர்ட் விதித்த ஆறு வார கெடு இன்றுடன் (மார்ச்- 29ம் தேதியுடன்) முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு, உச்ச நீதி மன்ற தீர்ப்பில் சொல்லப்பட்ட ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை எதை குறிக்கிறது என்பது குறித்து சுப்ரிம் கோர்ட்டில் விளக்கம் கேட்கப் போவதாக அறிவித்துள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என தமிழக எதிர்கட்சிகள் கடுமையாக எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் மேற்பார்வையில் அமைக்கப்பட வேண்டிய இந்த வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் நடந்த மாநாட்டில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றார் தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும்.” என்று கூறினார். இது குறித்து விவாதிக்க, திமுக செயற்குழு நாளை சென்னையில் கூடுகிறது. இவ்விவகாரத்தில், தஞ்சையில் டிடிவி தினகரன் தலைமையிலும் 25ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக காவிரி மேற்பார்வை குழு அமைக்க ஆலோசிப்பதாக சொல்லப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதற்குச் பதிலளித்த தமிழிசை, “காவிரி விவகாரத்தில் வாரியமோ, குழுவோ இதில் எது அமைத்தாலும் தமிழக மக்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எந்தப் பெயர் இருந்தால் என்ன, மத்திய அரசின் முடிவைத் தமிழகம் கேட்டுத்தான் ஆக வேண்டும். பெயர் வேண்டுமா நீர் வேண்டுமா?” என்று கேட்டார்.
சுப்ரிம் கோர்ட் விதித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.