கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹாக்கி விளையாட்டு மைதானம் உள்ளது. நாள்தோறும் இங்கு ஹாக்கி விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது போட்டிகளும் நடைபெறும்.
இந்நிலையில் சில மர்ம நபர்கள் குப்பைகளை ஆங்காங்கே வீசி செல்லும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று காலை அந்த குப்பைகளில் தீ பற்றியுள்ளது. அந்த தீயானது மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த மேட்டிலும் பற்றியுள்ளது.
இதனால் மேட் முழுவதும் பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்தனர். எனினும் மேட் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எவ்வாறு தீ பற்றியிருக்க கூடும்,வெயிலின் காரணமாக தீ பிடித்ததா, யாராவது பற்ற வைத்தார்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.