கொடைக்கானல் நகரமைப்பு மாஸ்டர் பிளானை 12 வாரங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானல் நகரமைப்பு மாஸ்டர் பிளானை விரைவில் அமல்படுத்த கோரியும், அதுவரை அங்குள்ள அனுமதியின்றியும், விதிமீறல்கள் உள்ளதாக கூறி கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என கொடைக்கானல் நகராட்சி ஆணையர் மற்றும் கொடைக்கானல் நகரமைப்பு ஆணைய உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி கொடைக்கானலை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன், நீதிபதி பி.ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொடைக்கானல் மாஸ்டர் பிளான் குறித்து பொதுமக்களின் கருத்துக்களும், ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அரசுடன் கலந்தாலோசித்து, திருத்தப்பட்ட மாஸ்டர் பிளான் விரைவில் வெளியிடப்படும் என மதுரை மண்டல நகரமைப்பு திட்ட துணை இயக்குனர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், கொடைக்கானல் நகரமைப்பு மாஸ்டர் பிளானை 12 வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கும், மதுரை மண்டல நகரமைப்பு திட்ட துணை இயக்குனருக்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.