முல்லைப் பெரியாறு பிரச்சனையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பினராயி விஜயன் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பின்னர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: தமிழக மக்களும், கேரள மக்களும் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதனை சுமூக பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லாவிட்டால், அடுத்தாக அதிகாரிகள் மட்டத்தின் மூலமாகவோ,தேவைப்பட்டால் முதலமைச்சர்கள் மட்டத்திலோ பேசி தீர்த்துக் கொள்ள முடியும். இதேபோல, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தையும் மூலம் தீர்வு காண முடியும் என்று கூறினார்.