'கரு' என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்க லைக்கா நிறுவனத்திற்கு விதித்த இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இது தொடர்பாக ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் மணிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், " கரு" பெயர் எனக்கு சொந்தமானது. ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் 2013 ஆம் ஆண்டு பதிவு செய்து உள்ளேன். இந்த நிலையில் ‘லைக்கா’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம், இந்த தலைப்பை பயன்படுத்தி திரைப்படத்தை தயாரித்து வருகிறது. எனவே, ‘கரு’ என்ற தலைப்பை திரைப்படத்தின் தலைப்புக்கு முன்பும், பின்பும், எந்த விதத்திலும் பயன்படுத்த லைக்கா நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி விசாரித்த தனி நீதிபதி எம்.சுந்தர் ‘கரு’ என்ற தலைப்பை லைக்கா நிறுவனம் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கரு என்ற தலைப்பில் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரியும், லைக்கா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. லைக்கா நிறுவனம் சார்பில் பி.எல்.நாராயணன் தங்களின் தரப்பு வாதங்களை முறையாக கருத்தில் கொள்ளாமல், கரு என்ற தலைப்பில் படத்தை வெளியிட தனி நீதிபதி இடைக்கால தடை விதித்துள்ளார். எனவே இந்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், கரு என்ற தலைப்பில் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.