Advertisment

அ.தி.மு.க-வுக்கு சுயமரியாதை உணர்வு எவ்வளவு நாள் இருக்கும்? கனிமொழி கேள்வி

பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பது தான் தி.மு.க.,வின் நிலைப்பாடு. தேர்தலில், கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு அடிப்படையில் முடிவு செய்யப்படும்; திருச்சியில் கனிமொழி எம்.பி பேட்டி

author-image
WebDesk
New Update
Kanimozhi Trichy

பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பது தான் தி.மு.க.,வின் நிலைப்பாடு. தேர்தலில், கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு அடிப்படையில் முடிவு செய்யப்படும்; திருச்சியில் கனிமொழி எம்.பி பேட்டி

நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தாலும், எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, வெறும் கண்துடைப்பு தான் என திருச்சியில் தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Advertisment

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அதில், பங்கேற்ற எம்.பி., கனிமொழி பேசியதாவது; மத்திய அரசு பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா கண்துடைப்பு. உண்மையான மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இல்லை. இந்த ஆட்சி (மத்திய அரசு) மறுபடியும் வந்து விடக்கூடாது என்பதற்காக பெண்கள் போராடுகிறார்கள். ஆட்சி தொடர்ந்தால் பெண்கள், பெண் குழந்தைகள் கல்வி உள்ளிட்ட உரிமைகள் பறிக்கும் நிலை ஏற்படும்.

தி.மு.க முதன்மை செயலாளராக இருக்கும் அமைச்சர் நேரு தேர்தலில் போட்டியிட பல வருடங்கள் காத்திருந்தார். பல தடவை (கருணாநிதி) தலைவரிடம் கேட்டதே இல்லை. பொறுமையாக பொறுப்புடன் கடுமையாக உழைத்தால் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும்.

பெரியாருக்கு நிகராக பெண்ணுரிமை போராளி இதுவரை வேறு எவருமில்லை. மகளிர் சுய உதவி குழு, பெண் உயர் கல்வி பயில 1000 ரூபாய், மகளிர் விலையில்லா பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு பார்த்துப் பார்த்து தந்தது தி.மு.க எனப் பேசினார்.

கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; பார்லிமென்டில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், மக்கள் தொகை கணக்ககெடுப்பு நடத்தப்பட வேண்டும். தொகுதிவாரியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அதன் பிறகு தான், தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று இட ஒதுக்கீடு மசோதாவில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

எப்போது கணக்கெடுப்பு துவங்கும் என்பதில் தெளிவில்லை. கணக்கெடுப்பு எப்போது துவங்கி, எப்போது முடியும் என்பது போன்ற பல சர்ச்சைகள் இருக்கும் நிலையில், மறு சீரமைப்பும் செய்து மசோதாவை நடைமுறைப்படுத்த 10 ஆண்டுகளாகலாம், 30 ஆண்டுகளாகலாம். நேர வரையறை யாருக்கும் தெரியாது. அதனால், அந்த இட ஒதுக்கீடு இந்த தேர்தலில் வருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை. எந்த தேர்தலில் வரும் என்றும் தெரியவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தாலும், எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது என்பதால், வெறும் கண்துடைப்பு தான்.

தி.மு.க., தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும், பார்லிமெண்ட் வளாகத்திலேயே பெண் எம்.பி.,யை கொச்சையாக பேசி அச்சுறுத்துவது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையை தான் பார்க்க முடிகிறது.

சுயமரியாதை காரணமாக, பா.ஜ.க, கூட்டணியில் இருந்து அ.தி.மு.க.,வினர் பிரிந்து இருக்கின்றனர். எவ்வளவு நாள் அவர்களுக்கு உணர்வு இருக்கும் என்று தெரியவில்லை. மகளிர்க்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான், இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வர வேண்டும், என்று தி.மு.க வலியுறுத்தியது. பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பது தான் தி.மு.க.,வின் நிலைப்பாடு. தேர்தலில், கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு அடிப்படையில் முடிவு செய்யப்படும். 

நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. மனித குலத்துக்கே எதிராக மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களை பற்றி யாரும் பேசுவதில்லை. 3 நாட்கள் மட்டுமே நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் எதைப்பற்றி பேசுவதற்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனாலும், நியாயத்தின் பக்கம் தான் தி.மு.க., நிற்கும் எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழக முழுவதுமிருந்து அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்க்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Trichy Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment