இந்திய கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நடிகர் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) சந்தித்து பேசினார். மக்கள் பணி சிறக்க நல்லக்கண்ணுவை சந்தித்ததாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் வருகையை அறிவித்ததையடுத்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டி.என்.சேஷனை நேற்று (வெள்ளிக்கிழமை) கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது ஹேராம் என்ற புத்தகத்தை நல்லக்கண்ணு கமல்ஹாசனுக்கு பரிசாக வழங்கினார்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “கட்சியை தாண்டி மக்களுக்காக சேவை செய்து வருவதால் நல்லகண்ணுவை சந்தித்தேன். மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன். இடதுசாரி தலைவர்களை மட்டும் அல்ல அனைவரையும் சந்திப்பேன். மதுரையில் 21ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.”, என்று கூறினார்.
அதேபோல், செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, ”கமல் ஆலோசனை பெறவில்லை. மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதைக்காக சந்தித்தார்.”, என தெரிவித்தார்.