திராவிடக் கட்சிகளைப் போல சாதித்துக் காட்டுவேன் என கமல்ஹாசன் கூறினார். விஜயகாந்தை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் இதை அவர் குறிப்பிட்டார்.
கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி ராமநாதபுரத்தில் தனது முதல் அரசியல் சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கிறார். இதையொட்டி பல்வேறு தலைவர்களை நேரில் சென்று சந்தித்து பேசி வருகிறார். முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோரிடம் ஆலோசனை பெற்றார்.
நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை நேற்று (18-ம் தேதி) சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று (பிப்ரவரி 19) தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை பகல் 12 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.
பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு வெளியே நிருபர்களை சந்தித்த கமல்ஹாசன், ‘விஜயகாந்த் அவர்களை பார்க்க வந்தேன். ரொம்ப நாள் ஆச்சு. அது ஒரு காரணம். திருமண மண்டபமாக இருந்தபோது வந்திருக்கிறேன். இப்போ அரசியல்வாதியாக இங்கு வருவது பொருத்தம்தான்.
அரசியல் பயணம் தொடங்க இருக்கிறேன். அதை சொல்லவும் வந்தேன். அவரே ஒரு பேட்டியில் அரசியலில் நான் சீனியர் என்றார். எனவே மூத்தவரிடம் கூறி, அவரிடம் வாழ்த்து பெற வந்தேன். வாழ்த்துகள் சொன்னார்.’ என்றார் கமல்.
‘திராவிடக் கொள்கைகளை கட்சிக் கொள்கையாக சேர்ப்பேன் என கூறியிருப்பீர்களே... திராவிடக் கட்சிகளைப் போல வெற்றி பெற முடியும் என நினைக்கிறீர்களா?’ என கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘திராவிட கொள்கைகளை கூறும் நானும் சக்சஸ் பண்ணிக் காட்டுவேன்’ என்றார்.