நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்டார். அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் ஆனந்த விகடன் வார இதழில் இந்து தீவிரவாதம் பற்றி எழுதியிர்ந்தார். இதையடுத்து, இந்து மகா சபையின் துணை தலைவர், கமலை கொல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டரில், ’என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்’ என்று பதிவிட்டிருந்தார்.
கமல் என்ன சொல்ல வருகிறார் என்பது பலருக்கும் புரியவில்லை. அடுத்த சில நிமிடங்களில் புரியாதவர்களுக்கு புரிந்து கொள்ள என்று இன்னொரு ட்விட்டை பதிவிட்டிருந்தார். அது இசை என்பவரின் ட்விட்டை ரீட்விட் செய்திருந்தார்.
இசையின் ட்விட்டர் பக்கத்தில் சிறுவன் ஒருவர் கத்தியால் கமல்ஹாசனின் போஸ்டரை ஆவேசமாக குத்திக் கிழிக்கும் விடியோ இணைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவனை, பின்னால் இருந்து ஒரு குரல், அவனை விடாதே குத்தி கிழி... அவன் தேவையில்லை’ என்று சொல்கிறது.
இந்து தீவிரவாதம் பற்றி பேசியதால்தான், சிறுவன் மனதில் நஞ்சை விதைத்திருக்கிறார்கள் என்பதை ட்விட்டரில் கமல்ஹாசன் சொல்லியிருக்கிறார்.