ஜெயலலிதா பிறந்த நாளில் சென்னைக்கு வருகை தரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாள் பிப்ரவரி 24. இந்த நாளில் ஜெயலலிதா அறிவித்த முக்கிய திட்டமான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
இதே நாளில் புதுவையில் ஒரு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்தது. சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்தே பிரதமர் மோடி புதுவை செல்கிறார். இதையொட்டி தமிழக அரசின் திட்டத் தொடக்க விழாவுக்கும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 24-ம் தேதி மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும் இந்தத் தகவலை பிரதமர் அலுவலகமோ, தமிழக அரசோ உறுதிப்படுத்தவில்லை.
ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு விழாவுக்கு மோடியை அழைத்தனர். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா படம் திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது; அந்தப் படத்தையே திறக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. எனவே சர்ச்சையை தவிர்க்கும் நோக்கில் அந்த விழாவில் மோடி கலந்து கொள்ளவில்லை.
ஆனால் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் ஜெயலலிதா பிறந்த நாளில் நடப்பதாக இருந்தாலும், நேரடியாக ஜெயலலிதா பெயரிலான விழா அல்ல என்பதால் பிரதமர் இதில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.