மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.
இதில் ஜெயலலிதா அதிமுக வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் அங்கீகரித்து பி படிவத்தில் வைத்த கைரேகையை சுயநினைவுடன் வைத்தாரா? என சந்தேகம் எழுப்பி கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி உத்தரவுப்படி, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டபோது அவரிடம் பெறப்பட்ட கைரேகைகள் தொடர்பான ஆவணங்களை பெங்களூரு சிறைத்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக பெங்களூரு சிறைத்துறைக்கும், ஆதார் ஆணையத்திற்கும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு நகலை அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதையடுத்து இந்த வழக்கை வரும் பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.