தமிழக சட்டபேரவையில் பேசிய கலசபாக்கம் எம்.எல்.ஏ. வி.பன்னீர் செல்வம், துணை முதல்வர் ஓபிஎஸை ஜல்லிக்கட்டு நாயகன் என்று பாராட்டி பேசினார்.
தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கேள்வி நேரத்தின் போது, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பேசினார். அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘‘ஜல்லிக்கட்டு நாயகன் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்’’ என்று குறிப்பிட்டார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு இதே நாளில் தான், சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது தற்காலிக முதல் அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் பேசி, அவசர சட்டம் கொண்டு வர அனுமதி வாங்கினார். இதை மனதில் வைத்துதான் எம்.எல்.ஏ. வி.பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டு நாயகன் என்று ஓபிஎஸை பாராட்டி பேசினார்.
உடன் எழுந்த துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘எல்லா பாராட்டுக்கும் உரியவர் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கே சாரும். பேரவை உறுப்பினர்கள் யாரும் என்னை பாராட்டி பேச வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டார்.