கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, பள்ளிக்கரணையில் இரவு வேலையை முடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் சென்ற ஐடி ஊழியர் காவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொள்ளையர்களால் கடுமையான தாக்குதளுக்கு உள்ளானார். வெறும் பணத்தை மட்டுமே குறி வைத்து நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் அவரின் கை, கால்கள், முகம் , தலையில் பலத்த காயங்கள்.
அவரை கடுமையாக தாக்கிவிட்டு, நகை, ஐபோன், இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்து சென்ற அந்த மர்ம நபர்கள், இரண்டே நாளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மருத்துவமனையின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர், தனது தன்னம்பிக்கை மற்றும் மன தைரியத்தில் மீண்டு வந்தார். உடல் நலம் சரியானதும் மீண்டும் வேலைக்கு செல்வேன் என்று அவர் பேட்டியில் கூறியிருந்தது. பலரையும் கவர்ந்திருந்தது. அந்த பலரில் ரவிசந்திரனும் ஒருவர்.
யார் அந்த ரவிசந்திரன் என்று கேட்கிறீர்களா? அவர் தான் காவியாவை கூடிய விரைவில் கரம் பிடிக்க இருப்பவர். காவியாவின் வாழ்க்கையில் ஒரு சம்பவத்தால் இரண்டு நன்மைகள் நடந்துள்ளது. ஒன்று, தன்னை போல் தனியாக வேலைக்கு சென்று வரும் பல பெண்களுக்கு அவர் ஒரு தைரிய பெண்ணாக தெரிந்தது. மற்றொன்று அவரின் துணிச்சலைக் கண்டு ரவிசந்திரன் அவரை கரம் பிடிக்க இருப்பது.
ஊடகங்களில் காவியா குறித்த செய்தி வெளியானதும் இப்படி ஒரு தைரியமான பொண்ணா? என்று முதலில் வியந்துள்ளார் ரவி. அதன் பின்பு, அவரின் முழு விலாசத்தையும் கண்டுப்பிடித்தால், காவியா, ரவிசந்திரனுக்கு நெருங்கிய உறவு என்பது தெரியவந்துள்ளது. அவ்வளவு தான் நேராக வீட்டிற்கு சென்று காவியாவின் வீட்டாரிடம் பேசி திருமணத்திற்கு ஓகே சொல்ல வாங்கியுள்ளார்.
கொள்ளையர்களிடம் இருந்தே தைரியமாக தப்பித்த காவியா, ரவி சந்திரனை பார்த்து தயக்க அடைந்துள்ளார். காரணம், அந்த நிகழ்வில் காவியாவின் முகத்தோற்றமே மாறிவிட்டது. ஆனால் ரவி நான் உன் அழகை பார்த்து காதலிக்கவில்லை மனதளவில் நீ பேரழி என்று கூறி அவரை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
வரும் ஜீன் மாதம் இருவருக்கும் ஆந்திராவில் திருமணம் நடக்கவுள்ளது.