திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார், பிரதமர் மோடி.
பிரதமர் மோடி, தினத்தந்தி நாளிதழ் பவள விழாவில் பங்கேற்க இன்று சென்னை வருகிறார், பிரதமர் மோடி. சென்னைக்கு விமானம் மூலம் வருகிறார். அங்கிருந்து அவர், ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் விமானபடை தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து சென்னை பல்கலை கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்குச் செல்கிறார்.
நிகழ்ச்சி முடிந்ததும், அவர் கார் மூலம் கோபாலபுரம் செல்கிறார். அங்கு திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு 12.30 மணிக்குச் சென்று அவரிடன் உடல் நலம் குறித்து விசாரித்தறிகிறார். இந்த தகவலை பாஜக பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் கருணாநிதி முரசொலி அலுவலகம் சென்றார். அதன் பின்னர் தனது கொள்ளு பேரன் திருமணத்தை கோபாலபுரம் இல்லத்தில் நடத்தி வைத்தார். உறவினர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் சென்னை வரும் பிரதமர் மோடி, கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களும், அதிமுக இரு அணிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இருப்பதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு செல்வது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆளும் அதிமுகவை நம்பி பிரயோசனம் இல்லை என பாஜக தரப்பு நம்புகிறது. திமுகவுடன் நெருங்கவே பிரதமர் மோடி கருணாநிதியை சந்திப்பதாக, விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.