இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது சக இன்ஸ்பெக்டர் முனிசேகர் தான் என சென்னை காவல்துறை இன்று உறுதி செய்துள்ளது.
சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பெரிய பாண்டியன். சென்னை கொளத்தூரில் உள்ள நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தை விசாரிக்கும் தனிப்படையில் இடம் பெற்றிருந்தார். கடந்த 13ம் தேதி ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார், கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, கொள்ளையர்களுடன் ஏற்பட்ட மோதலின்போது, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஆய்வாளர் பெரியபாண்டியன் உடன் சென்ற கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் குண்டுக் காயம் பட்டு ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால்தான் ஆய்வாளர் பெரியபாண்டி சுடப்பட்டுள்ளார் என்று ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ் கூறியிருந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொள்ளையர்களிடமிருந்து பெரியபாண்டியனை காப்பற்ற நினைத்து, ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களை நோக்கி சுடும்போது தவறுதலாக, ஆய்வாளர் பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்திருக்கலாம் என்று, விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பாலி எஸ்பி தீபக் பார்கவ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆய்வாளர் பெரியபாண்டியனை காப்பாற்ற முயற்சித்தபோது முனிசேகர் தவறுதலாக சுட்டது உறுதியானது என சென்னை போலீசார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். ராஜஸ்தான் போலீசாரின் விசாரணைக்கு பிறகு முனிசேகர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். குற்ற வழக்குகளை கையாள்வதில் பெரியபாண்டியன் திறமைசாலி என்பதால், அவரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ராஜஸ்தான் அனுப்பப்பட்டனர் என்றும் கூறினர்.