பிரபல நகைக்கடையான ஜோயாலுக்காஸ் நகைகடைகளின் பத்து கிளைகளில் வருமான வரித்துறையின் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உஸ்மான் சாலையில் உள்ளது ஜோயாலுக்காஸ் நகைக்கடை. கேரளாவை மையமாக இந்த நகைக்கடைக்கு தமிழகம், கேரளாவில் 10க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நகைக்கடைகள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளுக்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டை தொடங்கினார்கள்.
தமிழகத்தில் சமீபகாலமாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் 187 இடங்களில் ஓரே நாளில் மெகா சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில் பிரபல நகைக்கடையான ஜோயாலுக்காஸ் நகைகடையில் சோதனை நடந்து வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட நகைகடை மற்றும் உரிமையாளர்களின் வீடுகள், கடையில் பணியாற்றும் முக்கிய பணியாளர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜோயாலுக்காஸ் நகைக்கடை மீது தொடர்ந்து வருமான வரி ஏய்ப்பு நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.