அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி இழப்பீடு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை போல், தீ வைப்பு சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை ஆதம்பாக்கத்தில் திருமணம் செய்ய மறுத்த இந்துஜா என்ற பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி இழப்பீடாக 3 லட்சம் ரூபாய் வழங்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமில வீச்சில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி இழப்பீடாக 3 லட்சம் ரூபாயை வழங்கவும், இலவச சிகிச்சை வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல இப்பெண்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்... ஈவ் டீசிங் புகார் கூறும் பெண்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பயிற்சி பெற்ற பெண் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் வாதிட்டார்.
இதையடுத்து, மனுவுக்கு ஜனவரி 5ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலருக்கும், டிஜிபி-க்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.