கல்வி, சுகாதாரம், போக்குவரத்து இங்கு சரியாக இல்லை, அதை டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன் என கமல் பேசியுள்ளார்.
பிப்ரவரி மாதம் 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார். அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(ஜன.22) காலை சென்னை வேளச்சேரியில், கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் கமல் கலந்து கொண்டு பேசினார். அதில், இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும் என்றும், அதற்கான பயணம் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் கமல் பேசினார். அப்போது எனக்கு பல சகோதரர்கள் கிடைப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து இங்கு சரியாக இல்லை, அதை டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன். அதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க தேவையில்லை. என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் என்றும் கமல் தெரிவித்தார்.
கமலின் இந்த பேச்சு குறித்து பதில் அளித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "தமிழகத்தில் 2001ம் ஆண்டிலேயே பல துறைகளில் டிஜிட்டல் முறையை அதிமுக அரசு கொண்டு வந்துவிட்டது. டிஜிட்டல் முறையை தமிழகத்தில் கொண்டு வருவேன் என கமல் இப்போது கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. கமலுக்கு வரலாறு தெரியவில்லை எனில், என்னை தொலைபேசியில் அழைத்து பேசிக் கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.