டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் பரிந்துரை செய்துள்ளேன் என அரசின் கொறடா ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிளவுபட்ட அதிமுக, கடந்த 21-ம் தேதி இணைந்தது. எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணியினர், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கைகுலுக்கி இணைந்தனர். தொடர்ந்து, துணை முதல்வராக பன்னீர்செல்வமும், அமைச்சராக அவரது அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜனும் பொறுப்பேற்றனர்.
டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டு, அணிகள் இணைக்கப்பட்டதையடுத்து, அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையை கூட்ட உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் புதுவை ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனங்கள் எழும்ந்து வருகின்றன.
இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் பரிந்துரை செய்துள்ளேன் என அரசின் கொறடா ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் பரிந்துரை செய்துள்ளேன். அரசியலமைப்பு சட்டம் 10-வது அட்டவணையின் படி, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தகுதியின்மைக்கு ஆளாகிறார்கள். எனவே, இதுபோன்றதொரு கோரிக்கையை கொறடா என்ற முறையில் சபாநாயகரிடம் வைத்துள்ளேன். பரிந்துரை தொடர்பான முடிவை சபாநாயகர் எடுப்பார் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.