ஐ,பி.செந்தில்குமார், திமுகவின் எம்.எல்.ஏ.! நிகழ்ச்சி ஒன்றில், ‘ராஜராஜ சோழன் நான்’ எனத் தொடங்கும் சினிமாப் பாடலை பாடி அசத்தியிருக்கிறார். அதன் வீடியோ இங்கே!
ஐ.பி.செந்தில்குமார், திமுக.வின் ‘லக்கி’ எம்.எல்.ஏ.! காரணம், கடந்த 2016 தேர்தலில் தமிழக அளவில் தந்தை-மகன் என இருவருக்கும் திமுக.வில் எம்.எல்.ஏ. சீட் கிடைத்தது இவரது குடும்பத்திற்குத்தான். இவரது தந்தை ஐ.பெரியசாமியும் ஜெயித்தார்; ஐ.பி.எஸ். என தொண்டர்களால் அழைக்கப்படும் ஐ.பி.செந்தில்குமாரும் வெற்றி பெற்றார்.
ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார். அண்மையில் இவரது மைத்துனர் நவீன் திருமணம் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஐ.பி.செந்தில்குமார், திடீரென பாடல் குழுவினரிடம் ‘மைக்’கை கைப்பற்றி ரொமான்ஸ் பாடல் ஒன்றை பாட ஆரம்பித்துவிட்டார்.
ஐ.பி.செந்தில்குமார் பாடிய அந்தப் பாடல், 1987-ம் ஆண்டு வெளியான ‘ரெட்டைவால் குருவி’ என்ற படத்திற்கு கே.ஜே.ஜேசுதாஸ் பாடியது ஆகும். கவிஞர் வாலி எழுதிய பாடல் இது.
‘ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே’
என இந்தப் பாடலை ராகம் போட்டு முழுமையாக பாடி முடித்தார் ஐ.பி.செந்தில்குமார். எம்.எல்.ஏ. பாடினால் உறவினர்களின் கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்? ஒரே உற்சாகம்தான்!
அடுத்த தேர்தல் பிரசாரத்தில் பழனி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் ஐ.பி.செந்தில்குமாரின் பாடலை நேரில் கேட்கும் புண்ணியம் கிடைக்கலாம்!