தமிழகத்தில் உள்ள உணவு விடுதிகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும் என்ற காவல் துறையின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மார்ச் 23 ஆம் தேதிக்குள் காவல் ஆணையர் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கணேஷ் பிரபு தாக்கல் செய்த பொது நல வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரவு பத்து மணிக்கு மேல் மேற்கு மாம்பலத்தில் உள்ள உணவகத்திற்கு தான் சென்ற போது காவல்துறையினருக்கு பயந்து தனக்கு உணவு வழங்க ஊழியர்கள் மறுத்ததாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்ட போது, கடந்தாண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைப்படி 365 நாட்களும் ஹோட்டல்கள் திறந்திருக்கலாம் எனவும், ஹோட்டல்கள் மூட வேண்டிய நேரத்தை காவல்துறையினர் தீர்மானிக்க அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் இரவு நேர பணிகளுக்கு செல்பவர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்த மனுதாரர் தரப்பு, இரவு பத்து மணிக்குள்ளாக கடைகளை மூட வேண்டும் என மிரட்டப்படுவது, கடைகள் மற்றும் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதால், இரவு பத்து மணிக்கு மேல் ஹோட்டல்களை மூட வேண்டும் என நிர்பந்திக்க காவல்துறையினருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மார்ச் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்.