விஷால் பிறப்பித்த 6 கட்டளைகளால், தியேட்டர் அதிபர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ‘எம்.ஆர்.பி. விலையில்தான் இனி தியேட்டர்களில் ஸ்னாக்ஸ் விற்கவேண்டும்’
தமிழனுக்கு சினிமா என்றால் உயிர். அதனால்தான், தன்னை ஆளும் ஆட்சியாளர்களையே சினிமாவில் இருந்து தேர்ந்தெடுத்து வருகிறான். அதுமட்டுமல்ல, தன்னுடைய ஸ்டைல், பழக்கவழக்கங்களையே, தனக்குப் பிடித்த ஹீரோ செய்வது மாதிரி மாற்றியமைத்துக் கொள்கிறான். சினிமாவில் ஹீரோ பேசும் வசனங்களை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, அதன்படி செயல்படுபவனும் தமிழன் தான்.
ஆனால், அப்படியாப்பட்ட ரசிகனுக்கு நன்றி விசுவாய் இருக்கிறதா தமிழ் சினிமா என்று கேட்டால், இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. டிக்கெட் கட்டணம் தாறுமாறாக இருப்பதோடு, தியேட்டரில் விற்கும் ஸ்நாக்ஸில் பகல் கொள்ளை அடிக்கிறது. அதுமட்டுமல்ல, தாகத்திற்கு குடிக்கக் கூட தண்ணீர் எடுத்துவரக் கூடாது என்று சொல்லி, அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை 30 ரூபாய்க்கு விற்று வருகிறது.
இன்னொரு பக்கம், பார்க்கிங் கட்டணம் வேறு பர்ஸைப் பதம் பார்க்கிறது. ஒரு படம் பார்க்க மூன்று மணி நேரம் ஆகிறது என்றால், படம் முடிந்து வெளியே வரும்போது டிக்கெட் விலையைவிட பார்க்கிங்கிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க வேண்டுமானால், குறைந்தது1500 ரூபாய் செலவாகிறது. இதனால் வெறுத்துப்போன சினிமா ரசிகன் தான் திருட்டு டிவிடியையும், ஆன்லைன் டவுன்லோடிங்கையும் நாடிச் செல்கிறான்.
இனிமேலும் இது தொடர்ந்தால் சினிமா மொத்தமாக வீழ்ச்சி அடைந்துவிடும் என்பதால், தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தைத்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும், எம்.ஆர்.பி. விலையில்தான் கேண்டீனில் ஸ்நாக்ஸ் விற்க வேண்டும், தியேட்டர்களில் இனிமேல் அம்மா தண்ணீர் பாட்டில்கள் விற்கப்படுவதோடு, குடிநீர் எடுத்துவர மக்களை அனுமதிக்க வேண்டும், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது, விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும் என்ற அதிரடி 6 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் விஷால்.
மேற்கண்ட முடிவுகளை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளதாகவும், இதை மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் புகார் கொடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விஷால் தெரிவித்துள்ளார். இன்று தமிழக அரசிடம் இந்த கோரிக்கைகள் வைக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஜி.எஸ்.டி. மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியால் டிக்கெட் விலையை உயர்த்தத் துடிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு சம்மதிப்பார்களா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.