தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் நம்பிக்கையில்லாத் தீர்ன்மானம் கொண்டு வர பயப்படுவது ஏன்? என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சந்தித்தார். திமுக-வுடன், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் சென்றன.
ஆளுநரை சந்தித்தப் பின் பேசிய ஸ்டாலின், "ஆளும் கட்சியில் உள்ள உறுப்பினர்களில் 21 பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 98 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை ஏற்க முடியாது என்று கடிதம் அளித்துள்ள 21 பேர், ஆக, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, இருக்கக்கூடிய 233 பேரில், 119 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், 114 பேர் மட்டுமே இந்த அரசுக்கு ஆதரவு என்ற நிலை உள்ளது. எனவே, 119 என்ற எண்ணிக்கைப் பெரியதா அல்லது 114 பெரியதா என்பதைத்தான் இன்றைக்கு மாண்புமிகு ஆளுநரிடத்தில் சுட்டிக்காட்டி, வலியுறுத்தி, வற்புறுத்தி இருக்கிறோம்.
எங்களது இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்டரீதியாக நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்றும் ஆளுநரிடம் குறிப்பிட்டோம்" என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பது அல்லது வெற்று மிரட்டல்கள் விடுவதற்குப் பதிலாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வரலாம். அதற்கு ஏன் அவர் பயப்படுகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, ஆளுநர் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்கள் இதுகுறித்தும் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். அதாவது, திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவீர்களா? திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ஸ்டாலின், "சட்டமன்றத்தை கூட்டினால் கொண்டு வருவோம். கவர்னர் அவர்கள் என்ன நடவடிக்கையை எடுக்கிறார் என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். ஆனால், அதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை. அவர் ஏற்கனவே சட்டமன்றத்தை முடித்து வைத்திருக்கிறார். மறுபடியும் சட்டமன்றம் கூட வேண்டுமென்றால், கவர்னர் தான் கையெழுத்திட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார்? என்றக் கேள்வியை ஹெச்.ராஜா எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.