நடிகர் கமல்ஹாசனுடன் 2005 முதல் இணைந்து வாழ்ந்த நடிகை கவுதமி, கடந்த 2016ம் ஆண்டு, அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். அதன் பின்னர் கமல்ஹாசனுடன் அவர் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், கௌதமி மீண்டும் கமலுடன் இணைந்துவிட்டார் என செய்திகள் பரவியது.
இந்த நிலையில் கமலுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள கவுதமி, அவர் தனக்கு சம்பள பாக்கியும் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கமலுடன், எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. கமல் அரசியலை நான் ஆதரிக்கவும் இல்லை. என்னை, கமலுடன் உடன் ஒப்பிட்டு பேசுவது மனவருத்தம் அளிக்கிறது. மேலும் தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி எனக்கு, அவர் இன்னும் சம்பளம் வழங்கவில்லை' என்று கூறியுள்ளார்
தனது படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பளமே தராத கமல், எப்படி தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்வார்? எப்படி ஊழலை ஒழிக்கப் போகிறார்? என்று சமூக தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம், இவ்வளவு நாட்கள் சம்பளம் பாக்கி குறித்து வாய்த்திறக்காமல் இருந்த கௌதமி, கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த பிறகு, இவ்விவகாரம் குறித்து பேசியிருப்பது ஏன்? என்று கேள்விகள் எழுகின்றது.
கௌதமி பாஜகவின் ஆதரவாளர் என்று பரவலாக கூறப்படுவதுண்டு. கமல்ஹாசனை பிரிந்த பிறகு, 2016 ஆம் ஆண்டு கௌதமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.