அரசு பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை, பணிக்காலமாக கருதி, மருத்துவ மேற்படிப்புக்கான சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிராமப்புறங்கள், தொலைதூர பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகள் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், பேறுகால விடுப்பு, ஈட்டு விடுப்பு எடுத்திருந்தால் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கொள்கை விளக்க குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு எடுத்த பெண் மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்க மறுப்பதை எதிர்த்து அருணா உள்ளிட்ட அரசு பெண் மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மகப்பேறு விடுப்பு எடுக்க உரிமை உள்ள போதிலும், அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து முடிவெடுக்க, வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார்.
இதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.தண்டபாணி அடங்கிய அமர்வு, பெண் ஊழியர்களையும், அவர்களின் சிசுக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி, சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.