மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக கடையடைப்பு போராட்டம் நடந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலத் தாமதம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து, எதிர்க்கட்சியான திமுக இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. வணிகர் சங்கமும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மருந்துக் கடைகள் மட்டும் திறந்துள்ளன. மற்றபடி, காலை 9 மணி முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டன.
இந்த நிலையில், சென்னை மெரினாவில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அண்ணாசாலையில் இருந்து ஊர்வலமாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக கடையடைப்பு போராட்டம் நடந்துள்ளது. முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசு மற்றும் துணை நிற்கும் தமிழக அரசை கண்டித்து திமுக போராடி வருகிறது. தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது. தமிழக ஆளுநருக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை; அதனால் அவர் தனியே ஒரு டிராக்கில் ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.
டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்குபெறும் காவிரி உரிமை மீட்பு பயணம் 7 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். திருச்சி முக்கொம்பில் காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்குவது பற்றி நாளை ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்றார்.
More Details Awaited...