கடந்த சில தினங்களாக தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்தது. மேலும் இந்த வருடம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் , கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,
நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற தென் தமிழகத்தில் தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது. கன்னியாகுமரி கடற்பகுதியில் மையம் கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அத்துடன் மீனவர்கள் 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பரவலாக பெய்த கனமழை காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.