ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு விசைப்படகு ஒன்றில் நான்கு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த ராணி அபாக்கா கப்பலில் இருந்த கடலோர காவல் படை வீரர்கள், அவர்களை நோக்கி ரப்பர் குண்டு நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது.
இந்த தாக்குதலில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சான் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘இந்திய கடலோர காவல் படையினர், ஹிந்தியில் பேசச் சொல்லி எங்களை அடித்தனர். ஹிந்தி தெரியாது என்று கூறிய போதும் அடித்தனர். அதுமட்டுமில்லாமல், ஹிந்தி தெரியாமல் மீன் பிடிக்க வந்தால், சுட்டுக் கொல்வோம் எனவும் மிரட்டினர்’ என்று தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய, இந்திய கடலோர காவல்படையினர் மீது தமிழக கடலோர காவல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட மீனவர், பிச்சை அளித்த புகாரின் பேரில் தமிழக கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய கடலோர காவல்படையின் இத்தாக்குதலை கண்டிக்கும் விதமாக, ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மீனவர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்படி சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மீனவர்கள் கோரிக்கை வைத்தால், உரிய நஷ்ட ஈடு வழங்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.