காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி அய்யாகண்ணு தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும் படி காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி ராஜா முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரை பொதுமக்கள் வந்து செல்லும் இடம். அங்கு 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க முடியாது. எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது என்பது குறித்து மனுதாரர் கருத்தை அறிந்து தெரிவிக்க அய்யாகண்ணு தரப்பு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் மே-3 தேதி வரை போராட்டம் நடத்த அய்யாகண்ணு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு, மே 3 தேதிக்கு பின்னர் போராட்டம் நடத்துங்கள் என மனுதாரருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், அரசு பரிந்துரைக்கும் இடங்களில் 5 நாட்கள் வரை போராட்டம் நடத்தலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மனுவுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி ராஜா உத்தரவிட்டார்.