சென்னை எத்திராஜ் கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து பேராசிரியர் நிர்மலா ஏப்ரல் 1ம் தேதிக்கு நீக்க வேண்டும் இல்லை என்றால் எத்திராஜ் கல்லூரி நிர்வாக தலைவர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எத்திராஜ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா என்பவர் கல்லூரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர்கள் கிரிஜா சியாம்சுந்தர், சாந்தி, சித்ரா வெங்கடாசலம், திலகவதி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ’கல்லூரி முதல்வராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர் நிர்மலாவை விட கூடுதல் தகுதியும், திறமையும் உள்ள பலர் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், எத்திராஜ் கல்லூரி முதல்வராக டாக்டர் நிர்மலா தேர்வு செய்யப்பட்டது ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு குழுத் தலைவர் தேர்வு குழுவை மாற்றியமைக்க வேண்டும். கல்லூரி முதல்வருக்கான தேர்வை விதிமுறைகளின்படி புதிதாக நடத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை இரண்டு நீதிபதிகள் அமர்வு, உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த நிலையில் நிர்மலா தொடர்ந்து முதல்வர் பதவி வகித்து வந்த்தால் மனுதார்ர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடிரமேஷ், டீக்காராமன் அமர்வு, ‘‘ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் முதல்வர் பதவியிலிருந்து நிர்மலா நீக்கப்பட வேண்டும், இல்லையென்றால் ஏப்ரல் இரண்டாம் தேதி எத்திராஜ் கல்லூரி நிர்வாக தலைவர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டும்’’ என கெடு விதித்து உத்தரவிட்டனர்.